Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, June 30, 2010

20 வருடங்களின் பின் ஒரு தரிசனம்

மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயில் வருடார்ந்த தேர் உற்சவம் அன்று பக்கதர்கள் அங்கு சென்று அம்மனை தரிசிக்க படையினரால் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தையிட்டு மயிலிட்டிவாழ் மக்கள் தங்களது நன்றிகளை அங்குள்ள படைத்தரப்பினரிடம் தெரிவித்தனர். கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்த யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றனர். அதன் பின்னர் படையினரால் மீள் வருகைக்காக அனுமதிக்கப்படவில்லை. நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலைமே இதற்கு காரணமாயிற்று. மயிலிட்டி என்ற ஊர் யாழ்ப்பாணத்தின் வலிவடக்குப்பிரதேசத்தில் உள்ள ஓர் பகுதியாகும். கரையோரத்தில் உள்ளவர்கள் மீன்பிடித்தொழிலையும் உட்பகுதியில் உள்ளவர்கள் விவசாயத்தையும் மேற்கொண்டனர். இதனால் பொன் விளையும் பூமி எனவும் குறிப்பிட்டனர். அண்மையில் அப்பகுதியில் உள்ள வீரமாணிக்கன்தேவன்துறை கண்ணகி அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவன்று வேன்களிலும், பஸ்களிலும் பல ஆயிரக்கணக்கான மயிலிட்டி வாழ் மக்கள் சென்று கண்ணகி அம்மனை தரிசித்தனர். சிறப்பாக பூஜை வழிபாடுகள் நடந்து பின் அன்னதானத்துடன் நிகழ்வுகள் நடந்து முடிவுற்றன. அங்குள்ள ஒரு வயோதிபரை சந்திக்க நேர்ந்தது அவரை சந்தித்தபோது அவர் கோயிலின் ஓரத்தில் நின்றவாறு தூர எட்டி எட்டிப்பார்த்தவண்ணமே இருந்தார். என்ன தாத்தா எட்டிப்பார்க்கின்றீர்கள் என வினாவியபோது. அவரின் கண்கள் கலங்கியபடி என்ரை வீட்டைத்தான்.. ஆமாம் அவரது வீடு கோயில் அருகேதான் ஆனால் கோயிலைத்தரவிர மக்கள் வேறெங்கும் அனுமதிக்கப்படவில்லை. எங்கும் புதர் முளைத்து காடுபோல் காட்சியத்தது. மேலும் அவர் கூறுகையில் 20 வருடங்களுக்கு முன்னர் எனது பிள்ளைகளுடன் உலாவிய மண் ஐயா இது. இப்ப ஒருக்கா வந்துட்டன் இனி செத்தாலும் பரவாயில்லை ராசா என்று கண்ணைத் துடைத்துக்கொண்டார். இது எனக்குக்கிடைத்த பெரும்பாக்கியம்.. இதற்காகத்தான் இந்தக்கிழவன் இவ்வளவுநாளும் உயிரோடஇருந்தன்...என்றார். எனக்கு அப்போது இளையராஜாவின் பாடல் வரி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - சுதானு