
இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது.
÷சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ஷங்கர் இயக்கத்தில், தொழில்நுட்ப ரீதியில் சாதனை படைத்துள்ள திரைப்படம் என்பதால் இந்தத் திரைப் படம் பல கோடி ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டது.
÷மிகப் பெரிய லாபத்துக்குப் படம் விற்கப்பட்டு தயாரிப்பாளர்களும் வரலாறு காணாத லாபத்தை ஈட்டியிருப்பதாகத் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.÷இந்தப் படத்தின் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற கனவில் தியேட்டர் அதிபர்கள் பல லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்தி திரையிட்டனர்.
÷சுமார் ரூ.160 கோடி முதலீட்டுடன் தயாரிக்கப்பட்ட "எந்திரன்' திரைப்படம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த 1-ம் தேதி பலத்த எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டது. ஆனால், திரைப்படம் வெளியான 3 நாளிலேயே சிறு நகரங்களில் கூட்டம் குறைந்து, கட்டணத்தையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.
÷ஒரே ஊரில் மூன்று, நான்கு திரையரங்குகளில் வெளியான காரணத்தாலும் முதல் 3 நாள்களும் அதிகமான கட்டணத்துடன் நான்கு, ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டதாலும், 30 நாள் ஓடவேண்டிய படம் மூன்றே நாளில் வரவேற்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
÷தமிழகத்தில் இத் திரைப்படத்தின் திருட்டு விடியோ, டி.வி.டி. வெளியாகாத வகையில் காவல் துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத் திரைப்படம் தொடர்பான காட்சிகள் இடம் பெறக் கூடாது என தமிழ் இணையதளம் ஒன்றுக்கு சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
÷ஆளும் கட்சியின் குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் என்பதால் காவல் துறையும் திருட்டு விசிடி வெளியாகிவிடாமல் எல்லா வகையிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.