
லண்டன், டிச. 27-
விக்கிலீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் அசேஞ்சின் வாழ்க்கை வரலாறு எழுத ரூ.7.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஜூலியன் அசேஞ் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதில் அதிகப்படியான ரகசியங்கள் அமெரிக்கா சம்பந்தப்பட்டவை. இதனால் அமெரிக்க அரசாங்கம் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளது. அவர் மீது சுவீடன் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் செக்ஸ் புகார் அளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட இங்கிலாந்து நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அசேஞ் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க பதிப்பாளர், இங்கிலாந்து பதிப்பாளர் உள்பட உலகின் பல பகுதிகளில் இருந்தும் அவருக்கு சுமார் 7.5 கோடி வரை கிடைக்கும்.
"இந்த புத்தகத்தை எழுத நான் விரும்பவில்லை. ஆனால், நான் எழுதியே தீரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளேன். என் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நான் 1.5 கோடி ரூபாய் வரை செலவழித்து விட்டேன். மேலும் என் வழக்கு செலவுக்கும், விக்கிலீக்ஸ் இணையதளம் மூழ்காமல் காப்பாற்றவும் பணம் தேவைப்படுகிறது. ஆகவே இந்த புத்தகத்தை எழுத ஒப்புக்கொண்டேன்" என்று அசேஞ் கூறினார்.