
இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையின் உதவியின் சமிக்ஞை முறையிலான எல்லைக் கோடொன்றை அமைப்பது குறித்து இரு நாட்டு அரசாங்கங்களும் ஆலோசித்து வருகின்றன.இந்திய மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட குழுவினர் இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இந்திய மீனவர்கள் தமது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டும் போது அவர்களுக்கு ஒரு சமிக்ஞை விடுக்கப்படும். அவர்களிடம் மொபைல் போன் இருக்கும் பட்சத்தில் ஒரு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் அவர்கள் தமது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டியிருப்பது குறித்து அறிவுறுத்தப்படும்.
அவ்வாறான தொழில்நுட்ப முறையில் இந்திய மீனவர்கள் இனி வரும் காலங்களில் இலங்கையின் கடற்பரப்புக்குள் தவறியேனும் நுழைவது தடுக்கப்படும். அதற்கான தொழில்நுட்பம் கொண்ட சமிக்ஞை அலை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி பிரதேசங்களுக்கிடையிலான கடலில் நிலைநிறுத்தப்படும்.
உத்தேச நடைமுறை அமுலுக்கு வரும் பட்சத்தில் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்குப் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.