
வடபகுதியிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைக்கும் பணிகள் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்படுகின்றது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் போர்க் காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட பல கப்பல்களின் சிதைவுகள் கடலுக்கு அடியில் காணப்படுவதால் துறைமுகத்துக்குக் கப்பல்கள் வந்து செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
துறைமுகப் புனரமைப்புப் பணியின் முதலாவது கட்டமாக மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை மீ்ட்கும் பணியில் இந்தியாவின் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும், இதற்கு சில மாதங்கள் செல்லலாம் எனவும் தெரிகின்றது.
இதனைத் தொடர்ந்து வடபகுதிக்கான பிரதான துறைமுகமாக காங்சேன்துறை துறைமுகத்தைப் புனரமைப்பதற்கான பணிகளை இந்தியா மேற்கொள்ளும். இதேவேளையில், பலாலி விமானத் தளத்தைப் புனரமைப்பதற்கான பணிகளையும் இந்தியா பொறுப்பேற்றுள்ளது. விமான ஓடுபாதையும், விமானத் தளமும் இந்திய நிபுணர்களின் மேற்பார்வையில் புனரமைக்கப்படவிருக்கின்றது.