
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை தொடங்குகிறது. மாநாட்டை துவக்கி வைக்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று வருகிறார். கோவைக்கு நேற்று வந்த முதல்வர் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாநகர் கோலாகலமாக காட்சியளிக்கிறது.
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டு பொது நிகழ்ச்சிகள் தனியாகவும், ஆய்வரங்கங்கள் தனியாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆய்வரங்கங்கள் நடத்த கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மாநாடு நிகழ்ச்சிகளுக்கு கொடிசியா அருகில் 1100 மீட்டர் நீளத்தில் 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு துவக்க விழாவுக்கான ஏற்பாடுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கடந்த 2 நாளாக கவனித்து வருகின்றனர். மாநாட்டையொட்டி, 3 நாள் செம்மொழி கலைவிழா, கோவையில் 11 இடங்களில் நேற்றுமுன்தினம் துவங்கியது. நாளை வரை நடக்கிறது.
முதல்வர் கருணாநிதி நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர், அதிகாரிகள், பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் ஸ்ரீபதி, டிஜிபி லத்திகாசரண் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு செம்மொழி மாநாட்டு மைய நோக்கு பாடலுடன் துவங்குகிறது. முதல்வர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். நிதியமைச்சர் அன்பழகன் மாநாட்டு தகுதியுரை வழங்குகிறார். ஆளுநர் பர்னாலா சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார். சிந்து வெளி எழுத்து வடிவம் மற்றும் பழந்தமிழர்களுக்கு நெருக்கமான திராவிட மொழி வடிவம் குறித்து ஆய்வு நடத்திய பின்லாந்து தமிழ் மொழி அறிஞர் அஸ்கோபர்போலாவுக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ ஜனாதிபதி வழங்குகிறார். தொடக்க விழாவுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.
மாலை 4 மணிக்கு இனியவை&40 என்ற பெயரில் தமிழர் கலாசாரத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளுடன் மாநாட்டு ஊர்வலம் நடக்கிறது. இதை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். 40 அலங்கார ஊர்திகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடக்கிறது. வஉசி பூங்காவில் துவங்கி அவிநாசி ரோடு வழியாக மாநாட்டு பந்தலை அடைகிறது.
ஊர்வலத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் பார்வையிட அரசு மருத்துவ கல்லூரி அருகே தனி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகள் ஆகியோர் பார்ப்பதற்கு ஒரு கி.மீ. நீளத்துக்கு தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை துவக்கிவைக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வருகிறார். ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் விடுதியில் தங்குகிறார்.
மாநாடு 2ம் நாள் நிகழ்ச்சியில் உலக இணையத்தமிழ் மாநாட்டை கொடிசியாவில் உள்ள தனி அரங்கில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். பல்வேறு தலைப்புகளில் ஆய்வரங்கங்களும் நடக்கின்றன. மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது கண்காட்சி அரங்கை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழ கிரி, இணையதளக் கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், புத்தகக் கண்காட்சியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். மாநாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சி, கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியனவும் நடக்கிறது.
3ம் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கம், கருத்தரங்கம் நிகழ்ச்சிகளுடன் மாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி தலைமையில் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்‘ என்ற கருத்தரங்கம் நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, தி.க. தலைவர் வீரமணி, பாமக தலைவர் ராமதாஸ், பா.ஜ முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா, எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர்.
4வது நாளிலும் (26ம் தேதி) கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 27ம் தேதி மாலை மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடக்கும் விழாவில் செம்மொழி மாநாட்டு சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா வெளியிடுகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறந்த தமிழ் மென்பொருட்களை உருவாக்கியவர்களுக்கு பூங்குன்றனார் பரிசு வழங்கியும், மாநாட்டை முடித்து வைத்தும் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.