Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, June 27, 2010

சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள்

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கொடிசியா வளாகத்தில் பல்வேறு தலைப்புகளில், தமிழ் ஆய்வரங்குகள் நடந்து வருகின்றன. கொடிசியாவில் உள்ள சாத்தனார் அரங்கில், "சங்க கால பாண்டிய மன்னர்களின் தலை உருவம் பொறித்த நாணயங்கள்' என்ற தலைப்பில், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை பேசினார். அவர் பேசுகையில், சங்க கால மன்னர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் வெளியிட்டது போல், பாண்டிய மன்னர் தலை பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறார். இதுவரை வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளில் சங்ககால பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட தலை பொறிக்கப்பட்ட நாணயங்களின் பின்புறம் மீன் சின்னம் இல்லாமல் இருந்தது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயத்தில் மீன் சின்னம் இருப்பதை விளக்கினார், ஆசிரியர். ஆய்வரங்கில் பார்வையாளராக பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ""சோழ மன்னர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா, கண்டுபிடிக்கப்பட்டவை வெளியிடப்பட்டுள்ளதா,'' என தினமலர் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த ஆசிரியர், ""சங்க கால சோழ மன்னர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம், டச்சு நாட்டு தொல்லியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, லண்டனில் இருந்து வெளியாகும் நாணயவியல் பத்திரிகையில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அவர், "சங்க கால நாணயங்கள்' என்ற என்னுடைய ஆங்கில நூலில் வெளியாகி இருந்த புலிச்சின்னத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த மன்னர் தலை குறித்த நாணயத்தின் பின்புறம் உள்ள புலிச்சின்னத்தை ஒப்பிட்டு சோழ மன்னர் வெளியிட்ட சங்க கால நாணயம் என கட்டுரை எழுதி உள்ளார். இவரால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் தங்கள் காசுகளில் தங்களின் தலை உருவத்தை பொறித்திருக்கிறார்கள் என்று உறுதியாகிறது,'' என்றார். ஆய்வரங்கில், சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்த நிபுணரும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முன்னாள் முதல்வருமான கணபதி ஸ்தபதி, ""ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புகளால், சங்க இலக்கியங்கள் தோன்றிய காலமும், நாணயங்கள் வெளியிடப்பட்ட காலமும் அறிய முடிந்துள்ளது. பல நாணயங்களை கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டு, சமூகத்துக்கு தெரியப்படுத்திய தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கவுரப்படுத்த வேண்டும்,'' என்று பேசினார். தொல்காப்பியர் அரங்கு: மாநாட்டின் ஆய்வரங்க நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பகல் 2 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில், "சங்க காலம்: அண்மைக்கால ஆய்வு நிலைகள்' என்ற தலைப்பில் கலந்தாய்வரங்கம் நடைபெற்றது. ஜார்ஜ் எல்.ஹார்ட் தலைமை வகித்தார். "மொழி நோக்கு' என்ற தலைப்பில் கோதண்டராமனும், "பொருளிலக்கண நோக்கு' என்ற தலைப்பில் மணவாளனும், "இலக்கிய நோக்கு' என்ற தலைப்பில் ந.கந்தசாமியும், "கல்வெட்டியல் நோக்கு' என்ற தலைப்பில் ரா.நாகசாமியும், "தொல்லியல் நோக்கு' என்ற தலைப்பில் எ.சுப்பராயனும், சங்க கால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டு சங்க காலத்தை கணித்து, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியும், "அயல்நாட்டு ஆவண நோக்கு' என்ற தலைப்பில் ப.சண்முகமும், "வரலாற்றியல் நோக்கு' என்ற தலைப்பில் சா.சம்பகலெட்சுமியும் பேசினர்.