Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Sunday, June 27, 2010

தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன: நடிகர் சிவக்குமார்

"தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் சமம் என்பதையே வலியுறுத்துகின்றன,' என, வித்தாக விளங்கும் மொழி என்ற தலைப்பில் நடந்த பேச்சரங்கில், நடிகர் சிவக்குமார் பேசினார். செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான இன்று, நடிகர் சிவக்குமார் தலைமையில் "வித்தாக விளங்கும் மொழி' என்ற தலைப்பில் பேச்சரங்க நிகழ்வு நடந்தது. சுபவீரபாண்டியன் தொடக்க உரையாற்றிப் பேசியதாவது: மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டும் அல்ல. பண்பாட்டுக்கு வித்தாக அமைகிற, பண்பாட்டைக் கற்றுத்தருகிற, பண்பாட்டைக் கட்டமைக்கிற ஒன்றே மொழியாகும். தமிழ் எல்லாத்தரப்பினருக்குமான ஒழுக்கத்தைப் போதிக்கிறது. தனிமனித ஒழுக்கம், சமூகத்துக்கான ஒழுக்கம், உலகத்துக்கான மனிதநேய ஒழுக்கம் என பண்பாட்டுக்கு அடித்தளமாக அமைகிறது. மொழி மீது கைவைக்கப்படும் போதுதான் போராட்டம் வெடிக்கிறது; பண்பாட்டுச் சினம் எழுகிறது. சமத்துவம் என்னும் அறம்தான் பண்பாட்டின் உச்சம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மிகப்பெரும் சமத்துவத்தை தமிழ்தான் உலகுக்கு அறிவித்தது. சமத்துவம் மறுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் வெடித்தது. மொழிகளின் மீது கைவைக்கப்பட்ட போதுதான் மிகப்பெரும் போராட்டங்கள் எழுந்துள்ளன. "எரித்திரியா' என்னும் தேசத்தை அடிமைப்படுத்திய போது எழாத போராட்டம், அவர்களின் மொழியில் அமைந்த 54 ஆயிரம் புத்தகங்களை எரித்தபோது வெடித்தது. எரித்திரியா என்ற சுதந்திர தேசம் உருவானது. எத்தனை முறை ஒடுக்கப்பட்டாலும், ஒரு இனம் எழுந்தே தீரும். நிலவடிவிலான தேசியத்தை மதவடிவிலான தேசியம் வெல்லும். பாகிஸ்தான் பிரிவினை அதற்கு உதாரணம். நிலத்தில் ஒன்றுபட்ட போதும், மதரீதியாக தனிநாடு கோரினர். விரைவிலேயே பாக்.,கிடம் இருந்து வங்கதேசம் மொழியை அடிப்படையாகக் கொண்டு தனிநாடு கோரியது. மொழி வடிவ தேசியமே இறுதியில் வெல்லும். ஒரு மொழி காலம் கடந்து வாழ வேண்டுமெனில், அரசு, அரசியல்கட்சிகள்/ இயக்கங்கள், சான்றோர்/அறிஞர்கள், ஊடகங்கள், மக்கள் என ஐந்து தளங்களிலும் விரிவுபட்டு இயங்க வேண்டும். அறிஞர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி சில நாட்களிலேயே அழிந்து விட்டதற்கு, இந்த ஐந்து தளங்களும் ஒத்துழைக்காததுதான். செயற்கை மொழி எந்த ஒரு இனத்தின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் வெளிப்படுத்தவில்லை. பண்பாட்டை உயர்த்திப் பிடிக்காத எந்த மொழியும் நிலையாக வாழாது, என்றார். நடிகர் சிவகுமார் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே வளமையாக இருந்ததாக நிறுவப்பட்டுள்ளது. தமிழில் உலகம் உய்யத் தேவையான அனைத்தும் பகுத்தியம்பப் பட்டுள்ளன. கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் உன்னதமான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் வரிகளில், பிறப்பால் அனைவரும் சமம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த உயிரும் சமம். அரசனாயினும், ஆண்டியாயினும் ஓடும் ரத்தம் சிவப்பு என்பன போன்ற கருத்துகளை தந்தது தமிழ். உணவும், உடையும் எல்லாருக்கும் பொதுவானது என்பதை "உண்பது நாழி உடுப்பது இரண்டே' என்ற வரிகளிலும்; மற்றவர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்பதை, "செல்வத்துப் பயனே ஈதல்' என்ற அற்புத வரிகளும் அறிவுறுத்துகின்றன. கம்பனுக்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டதாக அறிஞர்கள் நிறுவியுள்ளனர். தெருக்கூத்து வழியாக, வாய்மொழி இலக்கியமாகவும் கம்பராமாயணம் இருந்துள்ளது. அதில், வேடுவனை சக்ரவர்த்தியின் மகன் சகோதரனாக ஏற்றுக்கொண்ட சமத்துவம் பற்றி அழகாக விளக்கி உள்ளனர். பாரதியாரும், "வெள்ளை நிறத்தொரு பூனை' என்ற பாடலடிகளில் நிறத்தால் பேதமில்லை என்று பாடினார். தமிழில் இயற்றப்பட்ட அத்தனை இலக்கியங்களும் மண்ணில் பிறந்த அனைவரும் சமம் என்பதையே சொல்லியுள்ளன, என்றார். "யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற தலைப்பில் ஜெகத்கஸ்பார் பேசியதாவது: உலகில் 6,400 மொழிகள் இருப்பினும் ஆறு மொழிகள் மட்டுமே செவ்வியல் மொழிகள் என்ற அந்தஸ்து பெற்றுள்ளன. அதில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயம். செம்மொழிக்கான பண்புகளாக அறிஞர்கள் பத்து பண்புகளை வரையறுத்துள்ளனர். தொன்மை, ஒத்திசைவு, தெளிவு, தன்னம்பிக்கை, கனிவு, லட்சியம், பொதுமை, பகுத்தறிவு, ஒருங்கமைவு, கண்ணோட்டம் என்பவையே அவை. இந்தப்பண்புகள் மட்டும் இருந்தால் போதாது. இவற்றை மக்களுக்கான வாழ்வியல் கூறுகளாகவும், ப ண்பாட்டுச் செயல்வடிவமாகவும் இணைப்பதாக மொழி இருக்க வேண்டும். ஐ.நா.,சபை 63 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு உலகப்பொது மானுடத்தைப் பிரகடனம் செய்தது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார், "யாதும் ஊரே; யாவரும் கேளிர்' எனக் கூறி விட்டார். நாகரீகத்தின் உச்சத்தில்தானே இந்த செம்மையான வார்த்தைகள் பிறந்திருக்க வேண்டும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பொதுவாகப் பேசிவிடலாம். ஆனால், யதார்த்தம் வேறு. பின் ஏன் போர்கள் வெடித்தது எனக்கேட்கலாம். "வலியது வாழும்' என்ற உலக நியதியே அதற்குக் காரணம். எலிக்கும், பெருச்சாளிக்கும் மனிதனுக்கும் மரபணுக்களில் 8 சதவீதம் வித்தியாசம் உள்ளது. இதுவே குரங்குக்கும் நமக்கும் இரண்டு சதவீதம். மனிதர்களுக்குள் அதிகபட்சம் 0.85 சதவீதம். இதனால், மனிதர்களுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை என, இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. அதேபோன்று, இன்றைய தலைமுறையில் ஒரு மனிதன் உருவாக 78 தலைமுறைகளை மரபணு கடந்து வந்திருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்படியானால், எட்டு கோடி தமிழர்களும் ஏதாவது ஒரு தலைமுறை காலகட்டத்தில் மிக நெருங்கிய ரத்த சொந்தமாகவே இருப்பார்கள் என்பதும் நிரூபணமாகிறதுதானே. இன்றைய விஞ்ஞானம் இன்று சொல்வதைத்தான், பொதுமையை, பிரபஞ்ச நிஜத்தை, ஆதார உண்மையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி "யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என தமிழ்ப்புலவன் கண்டுரைத்தான். தமிழ் வெறும் மொழி அல்ல. எட்டுக் கோடி உயிர்களின் ஒருங்கிணைப்பாய் தானே எழுந்த பண்பாடு. தமிழுக்கு கர்வத்திமிர் உண்டு. அதனால்தான், யாரேனும் ஒருவன் உணவுக்காக பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால், "பரந்து கெடுக உலகியற்றியான்' என, படைத்தவனையே சபிக்கும் தைரியம் கொண்டுள்ளது. இவ்வாறு, ஜெகத்கஸ்பார் பேசினார்.