
உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க எளிமையான புத்தகத்தை தமிழக அரசு வெளியீடு செய்ய வேண்டும். அதற்கான முடிவை செம்மொழி மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் பல்கலை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறினார்.
கோவையில் இன்று துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழ் பல்கலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி பேசியதாவது: உலக மொழிகளில் மிகவும் தொண்மையான, பழமையான தனித்தன்மை வாய்ந்த, மதச்சார்பற்ற மொழி தமிழ் மொழி, எந்த மொழியின் துணையில்லாமல் தனித்து இயங்க கூடிய மொழி. தமிழ் வளர்ச்சியை தனது பேச்சாற்றல் மூலம் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தவர் கருணாநிதி. அதற்கு தமிழகத்தைச் சாராத இலங்கையைச் சேர்ந்த தமிழன் என்ற முறையில் நன்றி கூறுகிறேன். தமிழ் இலக்கியங்கள் மற்ற இலக்கியத்தை காட்டிலும் வித்தியாசமானது. தொண்மையானது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க தமிழர்களால் பேசப்படும் உன்னதமான மொழி தமிழ்மொழி. இது தவிர மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 16 நாட்டு மக்களால் பேச்சு மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் உள்ளது. உலகம் முழுக்க தமிழ் மொழி உயர்வாக பேசப்பட்டாலும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் பேசப்படுவதில்லை, அவர்களது குழந்தைகளாலும் தமிழ் கற்றுக்கொள்ள முடிவதில்லை. தமிழ் உலகம் முழுக்க எழுத்து மொழியாக இல்லை. தகவல் தொடர்புக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் இந்த செம்மொழி மாநாட்டில் உலகம் முழுக்க தமிழ் பரவுவதற்கும், உலகம் முழுக்க பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் எளிதில் தமிழ் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க. அடிப்படை தமிழை கற்பிப்பதற்கு தமிழக அரசு ஒரு புத்தகத்தை வெளியீடு செய்ய வேண்டும். அதில் தமிழின் உன்னதமாக கலாச்சாரம், தொன்மை, பண்பாடு ஆகியவை எளிதில் அறியும் வகையில் இருக்கவேண்டும். அதற்கான முடிவை இம் மாநாட்டில் எடுக்க வேண்டும்.
சங்ககால இலக்கியங்களை போல, இந்தியாவின் புராதன இலக்கியமாக தமிழ் மொழி இலக்கியங்கள் திகழ்கிறது. அறிவியல் பயன்பாட்டிலுள்ள சொற்களை அறிவியல் வார்த்தைகளை கொண்ட தமிழ் சொற்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். அதோடு அன்றாடம் அறிமுகப்படுத்தப்படும் புதுமையான விஷயங்கள் அனைத்தையும் எளிமையான தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளியீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசினார்.