* 400 குளங்கள் உடைப்பெடுப்பு
* 2680 வீடுகள் முற்றாக சேதம்
* 15274 வீடுகள் பகுதியளவில் சேதம்
* 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவு
* 7 வைத்தியசாலைகள் மூடப்பட்டன
நாட்டில் தற்போது காணப்படும் சீரற்ற காலநிலையினால் 14 மாவட்டங்களில் 10 இலட்சத்து 81 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 23 பேர் உயிரிழந்தும் 36 பேர் காயமடைந்துமுள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளõர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் கணக்கிட முடியாத நிலை தற்போது நிலவுகின்றது என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதுவரையில் 591 முகாம்களில் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 348 பேர் உள்ளதுடன் இவர்களுக்காக கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களை எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் பட்டினி போடவில்லை. ஜே. வி. பி.யும் ஐ. தே. க.வும் உண்மை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே எம் மீது குற்றம் சுமத்த வேண்டும். எவ்விதமான மோசடிகளும் இடம்பெறாது பொது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இடர் முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த சில நாட்களாக நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலையினால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பிலேயே கூடுதலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேபோன்றே அம்பாறை, திருகோணமலை மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலும் மண் சரிவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுனாமியை விட மோசமான பாதிப்பாகவே தற்போதைய சீரற்ற காலநிலையை கூற முடியும்.
அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக 14 மாவட்டங்களில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 871 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2680 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 15 ஆயிரத்து 274 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துமுள்ளன. பல பிரதேசங்களில் படகுகள் மூலமே விநியோகங்கள் இடம்பெறுகின்றன. எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடிய சந்தர்ப்பமே உள்ளது.
எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவது போன்று சுற்றறிக்கைகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை. கடந்த 2010 ஆண்டில் 294 மில்லியன் ரூபாவே அனர்த்தங்களின் போது செலவாகியது. ஆனால் கடந்த 13 நாட்களில் 138 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது. இத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம். எவ்வாறாயினும் பொது மக்களுக்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
கிழக்கில் 7 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளது. புதிய நெடுஞ்சாலைகள் அழிந்து போயுள்ளன. இவற்றை சீர்செய்து மக்கள் வாழ்வை கட்டியெழுப்பும் சவாலும் அரசாங்கத்திற்கே உள்ளது. எமது இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளினாலேயே உயிர் சேதங்களை குறைக்க முடிந்தது. யாரையும் பட்டினி போடவோ சொகுசு ஹோட்டல்களை தேடி நாம் செல்லவோ இல்லை. கொழும்பில் இருந்து ஊடகங்களுக்கு அறிக்கை விடாது நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
குளங்கள் உடைந்து மக்கள் குடியிருப்புகளுக்குள் நீர் வரும் போது பொதுமக்களை பாதுகாக்க அதிகாரிகள் இரவு, பகல் பாராது பாடுபட்டனர். 400 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. எனவே எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன். சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கூட வெள்ள நீர் வந்தது.
எனவே அரசாங்கம் பாரியளவு ஈடுபாட்டுடன் நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றது என்றார்.