
இணையதளத்தை பயன்படுத்தாத சிறுவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நேரம் பார்த்தாலும் குழந்தைகள் இணையதளத்தை பார்வையிடுவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு.
இத்தகைய நிலைபாட்டால் தங்கள் குழந்தைகள் தனிமை நிலைக்கு ஆளாகி விடுவார்கள். அவர்களுக்கு குடும்ப பாசம் இல்லாமல் போய்விடும் என்ற கவலை பெற்றோர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில் மூனிச்சின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் ஆறுதலான தகவல் கிடைத்துள்ளது. குழந்தைகள் இணையதள தேடல்களை மேற்கொள்வதால் அவர்களது சமூக நடவடிக்கைகள் மேம்படுகின்றன என்று அவர்கள் கூறி உள்ளனர்.
குறிப்பாக இளம் சமூகத்தினருக்கு சமூக செயல்பாடுகளில் ஆர்வம் தூண்டுவதாக இணையதள பயன்பாடு உள்ளது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தள தேடல்களில் ஆர்வம் கொண்டவர்கள் எப்போதும் கணணி முன்பாக அமர்ந்து இருப்பதால் அவர்கள் தனித்து விடப்படும் அச்சம் உள்ளது.
அந்த அச்சத்தை போக்கும் வகையில் இந்த புதிய ஆய்வு தகவல்கள் அமைந்துள்ளன. வீட்டில் இணைய இணைப்பு இல்லாத குழந்தைகள் பள்ளிக்கு வெளியே ஏதேனும் ஒரு செயல்பாடுகளிலேயே தொடர்பு வைத்துள்ளனர்.
குறிப்பாக அத்தகைய குழந்தைகள் விளையாட்டு அல்லது ஏதேனும் ஒரு கலை நிகழ்ச்சியில் தொடர்பு வைத்துள்ளனர். ஆனால் இணையதள பயன்பாடு உள்ள குழந்தைகள் பள்ளிக்கு வெளியே 2 செயல்பாடுகளில் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் 18 ஆயிரம் பருவ வயதினர் மற்றும் 250 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இணையதள பயன்பாடு உள்ள நபர்கள் அதிக சமூக நடவடிக்கைகளில் தொடர்புள்ளவராக இருப்பது தெரியவந்தது.