Wednesday, June 23, 2010
செம்மொழிகளுள் தமிழுக்குச் சிறப்பிடம் உண்டு: பேராசிரியர் அஸ்கோ பர்போலோ
""மறக்க முடியா செம்மையான இலக்கியங்களைத் தமிழ் மொழி தந்திருக்கிறது'' என, "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெற்ற பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேசினார்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, சிந்துசிந்து வெளியின் எழுத்து வடிவம் பழந்தமிழுக்கு நெருக்கமான திராவிட மொழி வடிவம் என்று கூறும் நூலைப்படைத்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் அஸ்கா பர்போலாவுக்கு "கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் விருது, 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, ஐம்பொன் வள்ளுவர் சிலை ஆகியவற்றை வழங்கினார்.
விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்பரையாற்றி அஸ்கோ பர்போலா பேசியதாவது: புராதனம் மிக்கது செம்மொழித் தமிழ். மிக பழங்காலத்துக்கு முன்பே காலத்தால் அழியா இலக்கியங்களைத் தந்த மொழி தமிழ் மொழி. 3,000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம்; இலக்கிய வளம் மிக்கதும் கூட. அதற்கு முந்தைய சிந்துவெளி நாகரீக எழுத்துகள் திராவிட வடிவமே. ரிக்வேதங்களில் குறிப்பிடப்படும் நாகரீகம், சிந்துவெளி நாகரீகம் திராவிடத்தோடு தொடர்புடையது. சிந்து வெளி எழுத்துருக்களை காப்பாற்றி வைத்திருப்பது திராவிட மொழிக்குடும்பமே; குறிப்பாக தமிழ். ஹரப்பா நாகரீகம் திராவிட நாகரீகத்தோடு தொடர்புடையது. உலகின் பழமையான மொழிகளுள் தமிழ் குறிப்பிடத்தக்கதும் சிறப்புடையதும் ஆகும், என்றார்.
Labels:
செம்மொழி மாநாடு