Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Wednesday, June 30, 2010

20 வருடங்களின் பின் ஒரு தரிசனம்

மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயில் வருடார்ந்த தேர் உற்சவம் அன்று பக்கதர்கள் அங்கு சென்று அம்மனை தரிசிக்க படையினரால் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தையிட்டு மயிலிட்டிவாழ் மக்கள் தங்களது நன்றிகளை அங்குள்ள படைத்தரப்பினரிடம் தெரிவித்தனர். கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்த யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றனர். அதன் பின்னர் படையினரால் மீள் வருகைக்காக அனுமதிக்கப்படவில்லை. நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலைமே இதற்கு காரணமாயிற்று. மயிலிட்டி என்ற ஊர் யாழ்ப்பாணத்தின் வலிவடக்குப்பிரதேசத்தில் உள்ள ஓர் பகுதியாகும். கரையோரத்தில் உள்ளவர்கள் மீன்பிடித்தொழிலையும் உட்பகுதியில் உள்ளவர்கள் விவசாயத்தையும் மேற்கொண்டனர். இதனால் பொன் விளையும் பூமி எனவும் குறிப்பிட்டனர். அண்மையில் அப்பகுதியில் உள்ள வீரமாணிக்கன்தேவன்துறை கண்ணகி அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவன்று வேன்களிலும், பஸ்களிலும் பல ஆயிரக்கணக்கான மயிலிட்டி வாழ் மக்கள் சென்று கண்ணகி அம்மனை தரிசித்தனர். சிறப்பாக பூஜை வழிபாடுகள் நடந்து பின் அன்னதானத்துடன் நிகழ்வுகள் நடந்து முடிவுற்றன. அங்குள்ள ஒரு வயோதிபரை சந்திக்க நேர்ந்தது அவரை சந்தித்தபோது அவர் கோயிலின் ஓரத்தில் நின்றவாறு தூர எட்டி எட்டிப்பார்த்தவண்ணமே இருந்தார். என்ன தாத்தா எட்டிப்பார்க்கின்றீர்கள் என வினாவியபோது. அவரின் கண்கள் கலங்கியபடி என்ரை வீட்டைத்தான்.. ஆமாம் அவரது வீடு கோயில் அருகேதான் ஆனால் கோயிலைத்தரவிர மக்கள் வேறெங்கும் அனுமதிக்கப்படவில்லை. எங்கும் புதர் முளைத்து காடுபோல் காட்சியத்தது. மேலும் அவர் கூறுகையில் 20 வருடங்களுக்கு முன்னர் எனது பிள்ளைகளுடன் உலாவிய மண் ஐயா இது. இப்ப ஒருக்கா வந்துட்டன் இனி செத்தாலும் பரவாயில்லை ராசா என்று கண்ணைத் துடைத்துக்கொண்டார். இது எனக்குக்கிடைத்த பெரும்பாக்கியம்.. இதற்காகத்தான் இந்தக்கிழவன் இவ்வளவுநாளும் உயிரோடஇருந்தன்...என்றார். எனக்கு அப்போது இளையராஜாவின் பாடல் வரி ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா - சுதானு

இந்தியாவில் விண்டோல்-7 விலை

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அதிவேக இயங்கு மென்பொருள் விண்டோஸ்-7 அல்டிமேட் பேக் விலை இந்தியாவில் ரூ.11,799 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைநகர் டெல்லியில் இந்த மென்பொருள் அறிமுக நிகழ்ச்சி பள்ளிக் குழந்தைகள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. விண்டோஸ் -7 ஹோம் பேஸிக் - ரூ.5,899 விண்டோஸ் -7 ஹோம் ப்ரீமியம் - ரூ.6799 விண்டோஸ் -7 புரொபஷனல் - ரூ. 11,199 விண்டோஸ் -7 அல்டிமேட் - 11,799 இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பே விண்டோஸ் 7-க்கு ஆர்டர்கள் குவிந்து விட்டதாகத் தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஸ்டீவ் பால்மர், விஸ்டா மூலம் ஏற்பட்ட சரிவை விண்டோஸ் 7 இருமடங்கு சரி செய்துவிடும் என நம்புவதாகக் கூறினார். விண்டோஸ் 98 மற்றும் விஸ்டா உபயோகிப்பவர்களுக்கு மட்டும் 40 சதவிகித சலுகை விலையில் விண்டோஸ் 7 விற்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

Tuesday, June 29, 2010

அமெரிக்காவில் இந்த வருடத்தில் 133 வங்கிகள் மூடப்பட்டன

அமெரிக்காவில் மாதம் 11 வங்கிகள் நிதி சீர்குலைவு காரணமாக நட்டமடைந்து வருகின்றன. இதுவரை இந்த ஆண்டு 133 வங்கிகள் காலியாகியுள்ளன. கடந்த ஆண்டைவிட இது ஐந்து மடங்கு அதிகமாகும். பொருளாதார சீர்குலைவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து நட்டமடைந்து வருகின்றன. சராசரியாக மாதத்திற்கு 11 பெரிய மற்றும் சிறிய வங்கிகள் நட்டமடைந்து வருகின்றன. கடந்த ஆண்டு மொத்தம் 25 வங்கிகளே நட்டமடைந்தன. ஆனால், இந்த ஆண்டு இதுவரை 133 வங்கிகள் நட்டத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் அதிகளவில் இந்த ஆண்டிலேயே வங்கிகள் நட்ட மடைந்துள்ளன. கடந்த 1992 ஆம் ஆண்டு 181 வங்கிகள் நட்டமடைந்தமை குறிப் பிடத்தக்கது. தற்போது ரிபப்ளிக் பெடரல் வங்கி, வேலி கெபிடல் பேங்க், சொலூசன்ஸ் வங்கி ஆகியவை மூடப்பட்டுள்ளன. டிசெம்பர் 11 ஆம் திகதி இவை கடையை மூடிவிட்டன. கடந்த ஆண்டு லேஹ்மன் பிரதர்ஸ் வங்கி நட்டமடைந்தது. இதைத் தொடர்ந்து 25 வங்கிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகி 133 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அதாவது வாரந்தோறும் சராசரியாக 11 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. மொத்தம் 148 வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இவற்றால் அமெரிக்க காப்பீட்டுத்துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10 ஆயிரம் கோடி டொலர் என்கின்றனர் அதிகாரிகள்.

Sunday, June 27, 2010

தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன: நடிகர் சிவக்குமார்

"தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் சமம் என்பதையே வலியுறுத்துகின்றன,' என, வித்தாக விளங்கும் மொழி என்ற தலைப்பில் நடந்த பேச்சரங்கில், நடிகர் சிவக்குமார் பேசினார். செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான இன்று, நடிகர் சிவக்குமார் தலைமையில் "வித்தாக விளங்கும் மொழி' என்ற தலைப்பில் பேச்சரங்க நிகழ்வு நடந்தது. சுபவீரபாண்டியன் தொடக்க உரையாற்றிப் பேசியதாவது: மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டும் அல்ல. பண்பாட்டுக்கு வித்தாக அமைகிற, பண்பாட்டைக் கற்றுத்தருகிற, பண்பாட்டைக் கட்டமைக்கிற ஒன்றே மொழியாகும். தமிழ் எல்லாத்தரப்பினருக்குமான ஒழுக்கத்தைப் போதிக்கிறது. தனிமனித ஒழுக்கம், சமூகத்துக்கான ஒழுக்கம், உலகத்துக்கான மனிதநேய ஒழுக்கம் என பண்பாட்டுக்கு அடித்தளமாக அமைகிறது. மொழி மீது கைவைக்கப்படும் போதுதான் போராட்டம் வெடிக்கிறது; பண்பாட்டுச் சினம் எழுகிறது. சமத்துவம் என்னும் அறம்தான் பண்பாட்டின் உச்சம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மிகப்பெரும் சமத்துவத்தை தமிழ்தான் உலகுக்கு அறிவித்தது. சமத்துவம் மறுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் வெடித்தது. மொழிகளின் மீது கைவைக்கப்பட்ட போதுதான் மிகப்பெரும் போராட்டங்கள் எழுந்துள்ளன. "எரித்திரியா' என்னும் தேசத்தை அடிமைப்படுத்திய போது எழாத போராட்டம், அவர்களின் மொழியில் அமைந்த 54 ஆயிரம் புத்தகங்களை எரித்தபோது வெடித்தது. எரித்திரியா என்ற சுதந்திர தேசம் உருவானது. எத்தனை முறை ஒடுக்கப்பட்டாலும், ஒரு இனம் எழுந்தே தீரும். நிலவடிவிலான தேசியத்தை மதவடிவிலான தேசியம் வெல்லும். பாகிஸ்தான் பிரிவினை அதற்கு உதாரணம். நிலத்தில் ஒன்றுபட்ட போதும், மதரீதியாக தனிநாடு கோரினர். விரைவிலேயே பாக்.,கிடம் இருந்து வங்கதேசம் மொழியை அடிப்படையாகக் கொண்டு தனிநாடு கோரியது. மொழி வடிவ தேசியமே இறுதியில் வெல்லும். ஒரு மொழி காலம் கடந்து வாழ வேண்டுமெனில், அரசு, அரசியல்கட்சிகள்/ இயக்கங்கள், சான்றோர்/அறிஞர்கள், ஊடகங்கள், மக்கள் என ஐந்து தளங்களிலும் விரிவுபட்டு இயங்க வேண்டும். அறிஞர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி சில நாட்களிலேயே அழிந்து விட்டதற்கு, இந்த ஐந்து தளங்களும் ஒத்துழைக்காததுதான். செயற்கை மொழி எந்த ஒரு இனத்தின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் வெளிப்படுத்தவில்லை. பண்பாட்டை உயர்த்திப் பிடிக்காத எந்த மொழியும் நிலையாக வாழாது, என்றார். நடிகர் சிவகுமார் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே வளமையாக இருந்ததாக நிறுவப்பட்டுள்ளது. தமிழில் உலகம் உய்யத் தேவையான அனைத்தும் பகுத்தியம்பப் பட்டுள்ளன. கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் உன்னதமான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் வரிகளில், பிறப்பால் அனைவரும் சமம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த உயிரும் சமம். அரசனாயினும், ஆண்டியாயினும் ஓடும் ரத்தம் சிவப்பு என்பன போன்ற கருத்துகளை தந்தது தமிழ். உணவும், உடையும் எல்லாருக்கும் பொதுவானது என்பதை "உண்பது நாழி உடுப்பது இரண்டே' என்ற வரிகளிலும்; மற்றவர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்பதை, "செல்வத்துப் பயனே ஈதல்' என்ற அற்புத வரிகளும் அறிவுறுத்துகின்றன. கம்பனுக்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டதாக அறிஞர்கள் நிறுவியுள்ளனர். தெருக்கூத்து வழியாக, வாய்மொழி இலக்கியமாகவும் கம்பராமாயணம் இருந்துள்ளது. அதில், வேடுவனை சக்ரவர்த்தியின் மகன் சகோதரனாக ஏற்றுக்கொண்ட சமத்துவம் பற்றி அழகாக விளக்கி உள்ளனர். பாரதியாரும், "வெள்ளை நிறத்தொரு பூனை' என்ற பாடலடிகளில் நிறத்தால் பேதமில்லை என்று பாடினார். தமிழில் இயற்றப்பட்ட அத்தனை இலக்கியங்களும் மண்ணில் பிறந்த அனைவரும் சமம் என்பதையே சொல்லியுள்ளன, என்றார். "யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற தலைப்பில் ஜெகத்கஸ்பார் பேசியதாவது: உலகில் 6,400 மொழிகள் இருப்பினும் ஆறு மொழிகள் மட்டுமே செவ்வியல் மொழிகள் என்ற அந்தஸ்து பெற்றுள்ளன. அதில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயம். செம்மொழிக்கான பண்புகளாக அறிஞர்கள் பத்து பண்புகளை வரையறுத்துள்ளனர். தொன்மை, ஒத்திசைவு, தெளிவு, தன்னம்பிக்கை, கனிவு, லட்சியம், பொதுமை, பகுத்தறிவு, ஒருங்கமைவு, கண்ணோட்டம் என்பவையே அவை. இந்தப்பண்புகள் மட்டும் இருந்தால் போதாது. இவற்றை மக்களுக்கான வாழ்வியல் கூறுகளாகவும், ப ண்பாட்டுச் செயல்வடிவமாகவும் இணைப்பதாக மொழி இருக்க வேண்டும். ஐ.நா.,சபை 63 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு உலகப்பொது மானுடத்தைப் பிரகடனம் செய்தது. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார், "யாதும் ஊரே; யாவரும் கேளிர்' எனக் கூறி விட்டார். நாகரீகத்தின் உச்சத்தில்தானே இந்த செம்மையான வார்த்தைகள் பிறந்திருக்க வேண்டும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பொதுவாகப் பேசிவிடலாம். ஆனால், யதார்த்தம் வேறு. பின் ஏன் போர்கள் வெடித்தது எனக்கேட்கலாம். "வலியது வாழும்' என்ற உலக நியதியே அதற்குக் காரணம். எலிக்கும், பெருச்சாளிக்கும் மனிதனுக்கும் மரபணுக்களில் 8 சதவீதம் வித்தியாசம் உள்ளது. இதுவே குரங்குக்கும் நமக்கும் இரண்டு சதவீதம். மனிதர்களுக்குள் அதிகபட்சம் 0.85 சதவீதம். இதனால், மனிதர்களுக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை என, இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. அதேபோன்று, இன்றைய தலைமுறையில் ஒரு மனிதன் உருவாக 78 தலைமுறைகளை மரபணு கடந்து வந்திருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்படியானால், எட்டு கோடி தமிழர்களும் ஏதாவது ஒரு தலைமுறை காலகட்டத்தில் மிக நெருங்கிய ரத்த சொந்தமாகவே இருப்பார்கள் என்பதும் நிரூபணமாகிறதுதானே. இன்றைய விஞ்ஞானம் இன்று சொல்வதைத்தான், பொதுமையை, பிரபஞ்ச நிஜத்தை, ஆதார உண்மையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி "யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என தமிழ்ப்புலவன் கண்டுரைத்தான். தமிழ் வெறும் மொழி அல்ல. எட்டுக் கோடி உயிர்களின் ஒருங்கிணைப்பாய் தானே எழுந்த பண்பாடு. தமிழுக்கு கர்வத்திமிர் உண்டு. அதனால்தான், யாரேனும் ஒருவன் உணவுக்காக பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால், "பரந்து கெடுக உலகியற்றியான்' என, படைத்தவனையே சபிக்கும் தைரியம் கொண்டுள்ளது. இவ்வாறு, ஜெகத்கஸ்பார் பேசினார்.

சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள்

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, கொடிசியா வளாகத்தில் பல்வேறு தலைப்புகளில், தமிழ் ஆய்வரங்குகள் நடந்து வருகின்றன. கொடிசியாவில் உள்ள சாத்தனார் அரங்கில், "சங்க கால பாண்டிய மன்னர்களின் தலை உருவம் பொறித்த நாணயங்கள்' என்ற தலைப்பில், தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை பேசினார். அவர் பேசுகையில், சங்க கால மன்னர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் வெளியிட்டது போல், பாண்டிய மன்னர் தலை பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறார். இதுவரை வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளில் சங்ககால பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட தலை பொறிக்கப்பட்ட நாணயங்களின் பின்புறம் மீன் சின்னம் இல்லாமல் இருந்தது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயத்தில் மீன் சின்னம் இருப்பதை விளக்கினார், ஆசிரியர். ஆய்வரங்கில் பார்வையாளராக பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ""சோழ மன்னர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா, கண்டுபிடிக்கப்பட்டவை வெளியிடப்பட்டுள்ளதா,'' என தினமலர் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த ஆசிரியர், ""சங்க கால சோழ மன்னர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம், டச்சு நாட்டு தொல்லியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, லண்டனில் இருந்து வெளியாகும் நாணயவியல் பத்திரிகையில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. அவர், "சங்க கால நாணயங்கள்' என்ற என்னுடைய ஆங்கில நூலில் வெளியாகி இருந்த புலிச்சின்னத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த மன்னர் தலை குறித்த நாணயத்தின் பின்புறம் உள்ள புலிச்சின்னத்தை ஒப்பிட்டு சோழ மன்னர் வெளியிட்ட சங்க கால நாணயம் என கட்டுரை எழுதி உள்ளார். இவரால் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் தங்கள் காசுகளில் தங்களின் தலை உருவத்தை பொறித்திருக்கிறார்கள் என்று உறுதியாகிறது,'' என்றார். ஆய்வரங்கில், சங்க இலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்த நிபுணரும், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முன்னாள் முதல்வருமான கணபதி ஸ்தபதி, ""ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புகளால், சங்க இலக்கியங்கள் தோன்றிய காலமும், நாணயங்கள் வெளியிடப்பட்ட காலமும் அறிய முடிந்துள்ளது. பல நாணயங்களை கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டு, சமூகத்துக்கு தெரியப்படுத்திய தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கவுரப்படுத்த வேண்டும்,'' என்று பேசினார். தொல்காப்பியர் அரங்கு: மாநாட்டின் ஆய்வரங்க நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பகல் 2 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில், "சங்க காலம்: அண்மைக்கால ஆய்வு நிலைகள்' என்ற தலைப்பில் கலந்தாய்வரங்கம் நடைபெற்றது. ஜார்ஜ் எல்.ஹார்ட் தலைமை வகித்தார். "மொழி நோக்கு' என்ற தலைப்பில் கோதண்டராமனும், "பொருளிலக்கண நோக்கு' என்ற தலைப்பில் மணவாளனும், "இலக்கிய நோக்கு' என்ற தலைப்பில் ந.கந்தசாமியும், "கல்வெட்டியல் நோக்கு' என்ற தலைப்பில் ரா.நாகசாமியும், "தொல்லியல் நோக்கு' என்ற தலைப்பில் எ.சுப்பராயனும், சங்க கால சேர நாணயங்களில் உள்ள சில இலச்சினைகளை வைத்தும் ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் வெளியிட்ட சில நாணயங்களின் பின்புறம் காணப்படும் சில இலச்சினைகளை ஒப்பிட்டு சங்க காலத்தை கணித்து, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியும், "அயல்நாட்டு ஆவண நோக்கு' என்ற தலைப்பில் ப.சண்முகமும், "வரலாற்றியல் நோக்கு' என்ற தலைப்பில் சா.சம்பகலெட்சுமியும் பேசினர்.

Friday, June 25, 2010

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது. அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே.

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும். மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும். இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா? இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து. அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து. அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர். இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து. அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து. என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.

யாழ். குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

காங்கேசன்துறை துறைமுகத்தைப் பத்துக் கோடி ரூபா செலவில் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட விருக்கின்றன. நாட்டின் கடற்போக்குவரத்துக் களைச் சீரமைக்கும் திட்டத்தில் காங் கேசன் துறைமுக அபிவிருத்தியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகப் புன ரமைப்பு வேலைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் என்று தகவல் ஒன்று கூறுகின்றது. இது வரை காலமும் காங்கேசன்துறை துறைமுகம் பெரும்பாலும் இராணுவப் பணிகளுக்கே பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. தற் பொழுது நாட்டில் அமைதி நிலை கொண்டு வருவதால் துறைமுகத்தைப் பொதுவான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. புனரமைப்பு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், இறங்குதுறைகள் நவீனப்படுத்தப் படும் என்றும் துறைமுகப் படுகை ஆழப் படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. துறைமுகத்துக்கான பாதைகளும் புனரமைக்கப்படவிருப்பதோடு காங் கேசன்துறை துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய் வதற்கான திட்டங்களும் உருவாக்கப் பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. நாட்டின் நவீன வர்த்தகத் துறை முகங்களில் ஒன்றாக காங்கேசன் துறைமுகம் விரைவில் செயற்பட விருப்பதாக துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகம் பிரயாணிகளையும், சரக்கு களையும் ஏற்றிஇறக்கும் பிரதான துறைமுகங்களில் ஒன்றாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வடக்கில் விளையும் பொருள்களைச் சுலபமாக ஏனைய துறை முகங்களுக்குக் கொண்டு செல்லும் வசதிகளைக் கொண்ட துறைமுக மாகவும் இது அபிவிருத்தி செய்யப் படவிருக்கிறது.

குடாநாட்டுச் சந்தைகளில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

யாழ். குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. திருநெல்வேலி, சுன்னாகம், மருத னார்மடம் போன்ற சந்தைகளிலேயே மரக்கறி வகைகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளன. தற்போது பெய்துவரும் பருவம ழையே இந்த மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலிச் சந்தையில் மரக்கறி வகைகளின் நேற்றைய விலை விபரம் வருமாறு: கத்தரிக்காய் கிலோ 130 ரூபா, பயிற் றங்காய் கிலோ 90 ரூபா, உருளைக் கிழங்கு கிலோ 80 ரூபா, கோவா கிலோ 80 ரூபா, கரட் கிலோ 90 ரூபா, தக்காளிப்பழம் கிலோ 70 ரூபா, பச்சைமிளகாய் கிலோ 240 ரூபா, வெங்காயம் கிலோ140 ரூபா, முருங்கைக்காய் கிலோ 280 ரூபா, கீரைப்பிடி ஒன்று 30 ரூபா.

மூன்று சிம் போன் Icube-i700

இரண்டு சிம் இயக்கத்தில் மொபைல் போன்கள் உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது மூன்று சிம்கள் கொண்ட போன்கள் வரத் தொடங்கி உள்ளன. இந்த வரிசையில் வந்துள்ள ஐ க்யூப் ஐ700, மொபைல் போனுக்கான அனைத்து வசதிகளையும் தருவதுடன், சிறந்த செயல்பாட்டினையும் வழங்குகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களையும், ஒரு சி.டி.எம்.ஏ. சிம்மினையும் இணைத்து இயக்கலாம். இதன் பரிமாணங்கள் 118.8 – 46–14.5 மிமீ அளவில் உள்ளன. எடை 100 கிராம். இரண்டு அங்குல திரை தரப்பட்டுள்ளது. 3 மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கான திறன் தரும் வகையில் 1000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட கேமரா வீடியோ ரெகார்டிங் செய்கிறது. 3GP, AVI, MPEG4, MP4 ஆகிய பார்மட் வீடியோ பைல்களைக் கையாள்கிறது. MP3, MIDI, AMR, AWB, WAV ஆகிய பார்மட்டுகளில் உள்ள பைல்களை இயக்கும் வகையில் இதன் ஆடியோ பிளேயர் உள்ளது. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. ஜிபிஆர் எஸ், புளுடூத், யு.எஸ்.பி. மற்றும் வாப் தொழில் நுட்பங்கள் டேட்டா இணைப்பிற்கு வழி அமைக்கின்றன. ஜி.எஸ்.எம். இணைப்பிற்கு 32 எம்பி மெமரியும், சி.டி.எம்.ஏ. வுக்கு 16 எம்பி மெமரியும் தரப்பட்டுள்ளன. 500 முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ்புக், 200 எஸ்.எம்.எஸ்.கள் கொள்ளும் இடம், 4 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவை உள்ளன. வழக்கமான கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக், அலாரம், இ–புக் ரீடர், காலண்டர், கரன்சி கன்வர்டர், டார்ச் லைட் போன்றவையும் உள்ளன.

மொபைல் டேட்டா அழிந்து போனால்!

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது. போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா? சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை. இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை www.rseven.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும். இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது. இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: கோப்பை வென்றது இந்தியா

ஆசிய கோப்பையை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தினேஷ் கார்த்திக் அசத்தல் அரைசதம் மற்றும் நெஹ்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. லீக் சுற்றில் சொதப்பிய பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறின. நேற்று தம்புலாவில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மீண்டும் நெஹ்ரா: இந்திய அணியில் டிண்டா, ஓஜா நீக்கப்பட்டு, நெஹ்ரா, ஹர்பஜன் இடம் பெற்றனர். இலங்கை தரப்பில் முரளிதரன், மலிங்கா, குலசேகரா மீண்டும் அணிக்கு திரும்பினர். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். காம்பிர் "100': இந்திய அணிக்கு காம்பிர், தினேஷ் கார்த்திக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். தனது 100வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய காம்பிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குலசேகரா வீசிய 2வது ஓவரில் இரு முறை கண்டம் தப்பினார். முதலில் கண்டம்பி "கேட்ச்சை' கோட்டை விட்டார். அடுத்த பந்தில் சங்ககரா கை நழுவியது. இதனை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(15) பரிதாபமாக ரன் அவுட்டானார். கார்த்திக் அதிரடி: அடுத்து வந்த விராத் கோஹ்லி "கம்பெனி' கொடுக்க, தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடினார். மகரூப் வீசிய 8வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். பின் மாத்யூஸ் வீசிய 14வது ஓவரிலும் 3 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் நிதானமாக ஆடிய கோஹ்லி(28), மலிங்கா வேகத்தில் வீழ்ந்தார். இந்த நேரத்தில் அரைசதம் கடந்த கார்த்திக்(66), கண்டம்பி பந்தில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது. தோனி "சிக்சர்': மகரூப் பந்தில் ஒரு இமாலய சிக்சர், முரளிதரன் பந்தில் ஒரு பவுண்டரி பறக்க விட்ட தோனி அதிக நேரம் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கண்டம்பி பந்தில் குலசேகராவின் சூப்பர் "கேட்ச்சில்' 38 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மலிங்கா "யார்க்கரில்' ரெய்னா(28) நடையை கட்டினார். மந்தமான ஆட்டம்: கடைசி கட்டத்தில் ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா சேர்ந்து மந்தமாக ஆடினர். இவர்கள் "பவர் பிளே' ஓவரில் ஒன்று, இரண்டு ரன்களாக எடுக்க, எதிர்பார்த்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. குலசேகரா வேகத்தில் ரோகித் சர்மா(41) அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(25), ஹர்பஜன்(7) அவுட்டாகாமல் இருந்தனர். திணறல் துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணி எடுத்த எடுப்பிலேயே திணறியது. பிரவீண் வீசிய முதல் ஓவரில் தில்ஷன் "டக்' அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய இந்திய "வேகங்கள்' அடுத்தடுத்து விக்கெட் வேட்டை நடத்தினர். ஜாகிர் பந்தில் தரங்கா(16) காலியானார். நெஹ்ரா அசத்தல்: இதற்கு பின் நெஹ்ரா போட்டுத் தாக்கினார். போட்டியின் 14வது ஓவரில் ஜெயவர்தனா(11), மாத்யூசை(0) வெளியேற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். தனது அடுத்த ஓவரில் சங்ககராவை(17) அவுட்டாக்கிய இவர், இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டார். அப்போது 15.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் கண்டம்பி, கபுகேதரா இணைந்து போராடினர். கண்டம்பி(31) ரன் அவுட்டானார். இறுதியில் இலங்கை அணி 44.4 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. அரைசதம் கடந்து ஆறுதல் அளித்த கபுகேதரா(55) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய நெஹ்ரா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

Thursday, June 24, 2010

தழிழ் மொழியாம் செம்மொழி மாநாட்டின் போது கோவை நகர் திருவிழாப்போல் ஜொலித்து காணப்பட்டது. இதோ சில காட்சிகள்

Wednesday, June 23, 2010

தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் வீரத்தை விளக்கும்" இனியவை நாற்பது' அலங்கார வாகன அணிவகுப்பை ஜனாதிபதி, முதல்வர் ஆகியோர் கண்டு ரசித்தனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், "இனியவை நாற்பது' அணிவகுப்பில் மகாகவி பராதியாரை போற்றும் வகையில் இடம்பெற்ற அலங்கார அணிவகுப்பு.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக எளிய தமிழ் புத்தகம் வெளியிட பேராசிரியர் சிவத்தம்பி வேண்டுகோள்

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க எளிமையான புத்தகத்தை தமிழக அரசு வெளியீடு செய்ய வேண்டும். அதற்கான முடிவை செம்மொழி மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் பல்கலை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறினார். கோவையில் இன்று துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழ் பல்கலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி பேசியதாவது: உலக மொழிகளில் மிகவும் தொண்மையான, பழமையான தனித்தன்மை வாய்ந்த, மதச்சார்பற்ற மொழி தமிழ் மொழி, எந்த மொழியின் துணையில்லாமல் தனித்து இயங்க கூடிய மொழி. தமிழ் வளர்ச்சியை தனது பேச்சாற்றல் மூலம் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தவர் கருணாநிதி. அதற்கு தமிழகத்தைச் சாராத இலங்கையைச் சேர்ந்த தமிழன் என்ற முறையில் நன்றி கூறுகிறேன். தமிழ் இலக்கியங்கள் மற்ற இலக்கியத்தை காட்டிலும் வித்தியாசமானது. தொண்மையானது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க தமிழர்களால் பேசப்படும் உன்னதமான மொழி தமிழ்மொழி. இது தவிர மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 16 நாட்டு மக்களால் பேச்சு மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் உள்ளது. உலகம் முழுக்க தமிழ் மொழி உயர்வாக பேசப்பட்டாலும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் பேசப்படுவதில்லை, அவர்களது குழந்தைகளாலும் தமிழ் கற்றுக்கொள்ள முடிவதில்லை. தமிழ் உலகம் முழுக்க எழுத்து மொழியாக இல்லை. தகவல் தொடர்புக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் இந்த செம்மொழி மாநாட்டில் உலகம் முழுக்க தமிழ் பரவுவதற்கும், உலகம் முழுக்க பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் எளிதில் தமிழ் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க. அடிப்படை தமிழை கற்பிப்பதற்கு தமிழக அரசு ஒரு புத்தகத்தை வெளியீடு செய்ய வேண்டும். அதில் தமிழின் உன்னதமாக கலாச்சாரம், தொன்மை, பண்பாடு ஆகியவை எளிதில் அறியும் வகையில் இருக்கவேண்டும். அதற்கான முடிவை இம் மாநாட்டில் எடுக்க வேண்டும். சங்ககால இலக்கியங்களை போல, இந்தியாவின் புராதன இலக்கியமாக தமிழ் மொழி இலக்கியங்கள் திகழ்கிறது. அறிவியல் பயன்பாட்டிலுள்ள சொற்களை அறிவியல் வார்த்தைகளை கொண்ட தமிழ் சொற்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். அதோடு அன்றாடம் அறிமுகப்படுத்தப்படும் புதுமையான விஷயங்கள் அனைத்தையும் எளிமையான தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளியீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசினார்.

தமிழரென சொல்லிக் கொள்வது பெருமை தரும் : ஜார்ஜ்ஹார்ட் பெருமிதம்

""மகாகவி பாரதியாரின் கூற்றைப் போலவே, தமிழரெனச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ள வேண்டும்'' என மொழியியல் அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் பேசினார். செம்மொழி மாநாட்டு துவக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் பேசியதாவது: மகாகவிபாரதியார் "நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல்' என்ற பாடலில் தமிழர் எனச் சொல்லிக் கொள்வதன் பெருமை பற்றிக் கூறியுள்ளார். தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செம்மையானது. தமிழகம், கேரளா, இலங்கை போன்ற பரந்த வெளிகளில் செவ்விலக்கியமாக பேசப்பட்டு வந்துள்ளது. அதன் தனிச்சிறப்பு மிக்க கவிகள், ஆன்றோர்களின் அனுபவம், மகிழ்ச்சி, வருத்தம் உள்ளிட்டவற்றின் சிறப்பான வெளிப்பாடாகும். கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி எழுதிய "உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் கொள்ளலர்' என்ற பாடலை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எவ்வளவுஉயரிய கருத்துகளை தமிழ்ப்பாடல்கள் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே சான்று. வேட்கைப்பத்து என்ற சங்க என்னும் பாடலில், "வாழியாதன் வாழியவனி' என்று தொடங்கும் அடிகளில் இருந்து மழை பல பொலிக, வருக இரவலர் என உலகு உய்ய தேவையான கருத்துகள் மட்டுமே கோரப்பட்டுள்ளன. இத்தமிழ் மாநாட்டில் பங்கு பெற்றமைக்காக பெருமைப்படுகிறேன், என்றார்.

செம்மொழிகளுள் தமிழுக்குச் சிறப்பிடம் உண்டு: பேராசிரியர் அஸ்கோ பர்போலோ

""மறக்க முடியா செம்மையான இலக்கியங்களைத் தமிழ் மொழி தந்திருக்கிறது'' என, "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' பெற்ற பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேசினார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, சிந்துசிந்து வெளியின் எழுத்து வடிவம் பழந்தமிழுக்கு நெருக்கமான திராவிட மொழி வடிவம் என்று கூறும் நூலைப்படைத்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் அஸ்கா பர்போலாவுக்கு "கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது' வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதீபாபட்டீல் விருது, 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, ஐம்பொன் வள்ளுவர் சிலை ஆகியவற்றை வழங்கினார். விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்பரையாற்றி அஸ்கோ பர்போலா பேசியதாவது: புராதனம் மிக்கது செம்மொழித் தமிழ். மிக பழங்காலத்துக்கு முன்பே காலத்தால் அழியா இலக்கியங்களைத் தந்த மொழி தமிழ் மொழி. 3,000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம்; இலக்கிய வளம் மிக்கதும் கூட. அதற்கு முந்தைய சிந்துவெளி நாகரீக எழுத்துகள் திராவிட வடிவமே. ரிக்வேதங்களில் குறிப்பிடப்படும் நாகரீகம், சிந்துவெளி நாகரீகம் திராவிடத்தோடு தொடர்புடையது. சிந்து வெளி எழுத்துருக்களை காப்பாற்றி வைத்திருப்பது திராவிட மொழிக்குடும்பமே; குறிப்பாக தமிழ். ஹரப்பா நாகரீகம் திராவிட நாகரீகத்தோடு தொடர்புடையது. உலகின் பழமையான மொழிகளுள் தமிழ் குறிப்பிடத்தக்கதும் சிறப்புடையதும் ஆகும், என்றார்.

உலகின் முதல் மொழி தமிழ்! முதல்வர் கருணாநிதி

பல மாதங்களாக எதிர்பார்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று கோவையில் துவங்கியது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மாநாட்டை துவக்கி வைத்தார். 50 நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கில் "கொடீசியா' வளாகத்தில் குவிந்துள்ளனர். இம்மாநாட்டிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை உரையாற்றினார். அவர் கூறியதாவது: உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது வழங்கி உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இங்கு வருகைபுரிந்திருக்கிறார். இவர் தமிழ் மற்றும் தமிழ்மக்கள் மீது கொண்ட அன்பு, பற்று காரணமாக இங்கு வந்துள்ளார். இவர்களுக்கு உலகத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மடை திறந்த வெள்ளமாக இங்கு திரண்டு வந்திருக்கும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.தமிழ் மொழி உலகின் முதல் மொழி என்ற தகுதி படைத்தது. அஞ்சுகம்- முத்துவேலர் மகனாக பிறந்து 14 வயது முதல் தமிழ் வளர்க , வெல்க என்று எழுதி புறப்பட்டேன். 20 வயதில் சேரன் என்ற புனைப்பெயரில் முரசொலியில் எழுதினேன். அண்ணா, பெரியார், அன்பில் வளர்ந்து தமிழே ஆயுதமாக கொண்டு கதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், நாவல் என பல துறையில் பணியாற்றினேன். ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழுக்காக உ<ழைத்தேன், 8 முறை தமிழ் மாநாடு நடந்திருக்கிறது. ஏற்கனவே நடந்ததது தமிழ்மாநாடு, தற்போது நடப்பது உலக்கத்தமிழ்ச்செம்மொழி மாநாடு ஆகும். இந்த 3 சொற்களும், பொருளும், பொருத்தமும் கொண்டது. உலக அளவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் வித்தியாசம் உண்டு. சிந்து சமவெளி நாகரிகம் துவங்கியது முதல் 40 ஆண்டுகாலமாக பல்வேறு அறிஞர்கள் தமிழுக்காக தொண்டாற்றியுள்ளனர். பெரும் புகழ் கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக்கிட தி.மு.க., காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசின் உதவியுடன் முடிந்தது. இந்த மாநாடு இன்னும் ஆய்வுக்கான திட்டங்களை வகுக்கவும் பயன்பெறும் இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழர்களின் பண்பாட்டை புகழ்ந்தார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்

தமிழர்களின் பண்பாடு மிகவும் சிறந்தது. தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை இன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவக்கி வைத்தார். பின் துவக்க உரையாற்றிய ஜனாதிபதி பேசுகையில், " இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் இலங்கியங்கள் பெரும் சமூக சீர்திருத்தத்திற்கு உதவியது. தமிழ்நாடு ஒரு முன்னோடியாக இருந்துள்ளது. தமிழ் இலக்கியங்கள் நல்வழி காட்டுவதாக இருந்தது. இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கலைஞர் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் . மாநாட்டுக்கான பாடலை சிறப்பான முறையில் கருணாநிதி எழுதியுள்ளார். இந்த நேரத்தில் , நான் ஜனாதிபதி பதவிக்கான பிரசாரத்தை சென்னையில் தான் துவக்கினேன் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறேன். இந்திய பாரம்பர்யதிற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தமிழர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர். சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கலை மற்றும் இலக்கியங்களை போற்றி பாதுகாத்தனர். பல்லவ கட்டட கலை தமிழர்களின் பெருமையை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. பரதநாட்டியத்தின் பிறப்பிடம் தமிழகம் தான் என்பது சிறப்பம்சமாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம் தமிழின் சிறப்பம்சமாகும். மகாத்மா காந்தி அவர்களே திருக்குறளைப் போற்றியுள்ளார். கம்பராமாயணம்,சிலப்பதிகாரம்,சீவக சிந்தாமணி தமிழ்மொழி தந்த கொடையாகும். சுப்ரமணிய பாரதியார் நாட்டு விடுதலைக்காக பெரும் பங்காற்றியுள்ளார். அஸ்கோ பர்போலோ விற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பிரமாண்ட விழாவிற்கு காரணமான கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன் என்றார். விழாவில் பேசிய ஜனாதிபதி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை தமிழில் கூறினார்.

இது வரை செம்மொழி மாநாடு நடைபெற்ற இடங்கள்

Tuesday, June 22, 2010

9 ஆவது செம்மொழி மாநாடு இன்று கோலாகலமாக துவங்குகிறது

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டினால், கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர். "கொடிசியா' மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்குகிறது. துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். மாநாட்டு சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கி கவுரவிக்கிறார். பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடக்கவுரையாற்றுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, அவினாசி ரோடு வழியாக சென்று, மாநாட்டு வளாகத்தை அடைகிறது. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பீளமேடு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் இருந்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் பார்வையிட, அவினாசி சாலையில் பல இடங்களில் பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை வ.உ.சி., பூங்கா மைதானம் முதல் ஹோப் காலேஜ் வரை சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கண்டுகளிக்கலாம். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்றிரவு கோவை வந்தார். கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கும் அவர், இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும், மாநாடு துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். துவக்க விழா, 11.40 மணிக்கு முடிந்ததும், சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வு எடுக்கிறார். பின், மாலை 5.30 மணிக்கு, கோவை மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்குள்ள மேடையில் இருந்து, "இனியவை நாற்பது' என்ற பெயரில் நடக்கும் மாநாட்டுப் பேரணியை கண்டு களிக்கிறார். இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையம் செல்கிறார். 7.25 மணிக்கு, விமானப்படை விமானம் மூலம் டில்லிக்கு புறப்படுகிறார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் நேற்று காலை முதல் கோவை வரத்துவங்கினர். அவர்கள் தங்குவதற்கு நகரில் பல ஓட்டல்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநாட்டுக்கு முன்பே மக்கள் படையெடுப்பு நேற்றே பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து, மாநாட்டு வளாகத்தை பார்வையிட்டனர். அவினாசி சாலை முதல் மாநாட்டு மேடை அமைந்துள்ள பொது அரங்க வளாகம் வரை சாலை நெடுகிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்று அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய அரங்கங்களை பார்வையிட்டனர். மாநாட்டை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநாடு துவங்கும் முன்பே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், வந்து சென்றுள்ளனர். இதனால், மாநாட்டின் போது பல லட்சம் மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது' என்றார். 10 அடிக்கு ஒரு போலீஸ் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு செல்லும் அவினாசி சாலையின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் சாலையின் இரு புறங்களிலும் நேற்று காலை முதலே நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அணிவகுப்பை பார்வையிடுவதற்கான மேடைகள் தோறும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநாட்டு பொதுஅரங்க வளாகத்தை அடுத்துள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 4,600 பேர் பங்கேற்கின்றனர். இவ்வளாகத்துக்குள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை. மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்தில் 4.4 லட்சம் சதுர அடி பரப்பில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை அமர்ந்து துவக்க விழாவை பார்க்கலாம். பல்வேறு தலைப்புகளில் நடக்கும் ஆய்வரங்கத்திற்கு 21 தனி அரங்குகள் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு பந்தலை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் நடக்கும் நிகழ்வுகளை கூட துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் ராட்சத பலூனில் நவீன கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தமிழக டிஜிபி லத்திகாசரண் தலைமையில் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், இரண்டு ஐ.ஜி.க்கள், 8 டிஐஜிக்கள் உட்பட பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள்!

இசை - எ.ஆர்.ரஹ்மான் எழுத்து - கலைஞர் மு.கருணாநிதி பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன் மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழிகாட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்! கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும் எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும் புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - ஓதி வளரும் உயிரான உலக மொழி - ஓதி வளரும் உயிரான உலக மொழி - நம் மொழி நம் மொழி - அதுவே செம்மொழியான - தமிழ் மொழியாம்! தமிழ் மொழி! தமிழ் மொழி! தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! தமிழ் மொழியாம்! தமிழ் மொழியாம்! தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! தமிழ் மொழியாம்! எங்கள் தமிழ் மொழியாம்! தமிழ் மொழியாம்! எங்கள் தமிழ் மொழியாம்! செம்மொழியான - தமிழ் மொழியாம்! வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே! வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே! செம்மொழியான - தமிழ் மொழியாம்!

தமிழ்ச் செம்மொழி

உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார். கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது. தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர். பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் நிலைநாட்டியுள்ளனர். “இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது. சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்" எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார். உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார். மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர். எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும். அறிஞர் பெருமக்களும் மொழிவல்லுநர்களும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே தமிழ் செம்மொழி என்ற கருத்தினைத் தளராது வலியுறுத்திக் கூறி வந்திருப்பினும், மாண்புமிகு தமிழக முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட மதிநுட்பத்துடன் கூடிய விடாமுயற்சியின் விளைவாக இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.

நாளை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆரம்பம்

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை தொடங்குகிறது. மாநாட்டை துவக்கி வைக்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று வருகிறார். கோவைக்கு நேற்று வந்த முதல்வர் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாநகர் கோலாகலமாக காட்சியளிக்கிறது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டு பொது நிகழ்ச்சிகள் தனியாகவும், ஆய்வரங்கங்கள் தனியாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆய்வரங்கங்கள் நடத்த கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மாநாடு நிகழ்ச்சிகளுக்கு கொடிசியா அருகில் 1100 மீட்டர் நீளத்தில் 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு துவக்க விழாவுக்கான ஏற்பாடுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கடந்த 2 நாளாக கவனித்து வருகின்றனர். மாநாட்டையொட்டி, 3 நாள் செம்மொழி கலைவிழா, கோவையில் 11 இடங்களில் நேற்றுமுன்தினம் துவங்கியது. நாளை வரை நடக்கிறது. முதல்வர் கருணாநிதி நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர், அதிகாரிகள், பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலர் ஸ்ரீபதி, டிஜிபி லத்திகாசரண் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். மாநாடு, நாளை காலை 10.30 மணிக்கு செம்மொழி மாநாட்டு மைய நோக்கு பாடலுடன் துவங்குகிறது. முதல்வர் கருணாநிதி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். நிதியமைச்சர் அன்பழகன் மாநாட்டு தகுதியுரை வழங்குகிறார். ஆளுநர் பர்னாலா சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைக்கிறார். சிந்து வெளி எழுத்து வடிவம் மற்றும் பழந்தமிழர்களுக்கு நெருக்கமான திராவிட மொழி வடிவம் குறித்து ஆய்வு நடத்திய பின்லாந்து தமிழ் மொழி அறிஞர் அஸ்கோபர்போலாவுக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை’ ஜனாதிபதி வழங்குகிறார். தொடக்க விழாவுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. மாலை 4 மணிக்கு இனியவை&40 என்ற பெயரில் தமிழர் கலாசாரத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளுடன் மாநாட்டு ஊர்வலம் நடக்கிறது. இதை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். 40 அலங்கார ஊர்திகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் நடக்கிறது. வஉசி பூங்காவில் துவங்கி அவிநாசி ரோடு வழியாக மாநாட்டு பந்தலை அடைகிறது. ஊர்வலத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் பார்வையிட அரசு மருத்துவ கல்லூரி அருகே தனி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகள் ஆகியோர் பார்ப்பதற்கு ஒரு கி.மீ. நீளத்துக்கு தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டை துவக்கிவைக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வருகிறார். ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் விடுதியில் தங்குகிறார். மாநாடு 2ம் நாள் நிகழ்ச்சியில் உலக இணையத்தமிழ் மாநாட்டை கொடிசியாவில் உள்ள தனி அரங்கில் முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். பல்வேறு தலைப்புகளில் ஆய்வரங்கங்களும் நடக்கின்றன. மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது கண்காட்சி அரங்கை மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழ கிரி, இணையதளக் கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், புத்தகக் கண்காட்சியை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். மாநாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சி, கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியனவும் நடக்கிறது. 3ம் நாள் நிகழ்ச்சியில் கவியரங்கம், கருத்தரங்கம் நிகழ்ச்சிகளுடன் மாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி தலைமையில் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்‘ என்ற கருத்தரங்கம் நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, தி.க. தலைவர் வீரமணி, பாமக தலைவர் ராமதாஸ், பா.ஜ முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா, எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 4வது நாளிலும் (26ம் தேதி) கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 27ம் தேதி மாலை மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடக்கும் விழாவில் செம்மொழி மாநாட்டு சிறப்பு அஞ்சல் தலையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா வெளியிடுகிறார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறந்த தமிழ் மென்பொருட்களை உருவாக்கியவர்களுக்கு பூங்குன்றனார் பரிசு வழங்கியும், மாநாட்டை முடித்து வைத்தும் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.

Friday, June 18, 2010

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார்

அண்மையில் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியாரின் வருடார்ந்த உற்சவத்தின் போது புனிதரின் திருச்சொரூபம் பவணிவரும் காட்சி கண்கொள்ளாக்காட்சி. வருடார்ந்த உற்சவம் ஜூன் 03ஆம் திகதி தொடங்கி ஜூன் 10 ஆம் திகதி நிறைவுற்றது. இறுதி நாளன்று பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் புடைசூழ அந்தோனியார் பாலகன் யேசுவுடன் உலாவந்த காட்சிகளை பார்க்க கண்கள் கோடி வேண்டும்.

உலக காற்பந்து 2010 நிகழ்வுகள்

Thursday, June 17, 2010

பொலிவூட் தம்பதிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் ராவணா பட வெளியீட்டிற்காக லண்டனிலுள்ள பிரித்தானிய திரைப்பட நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். இவர்களோடு அமிர்தாப் பச்சன் அவரது பாரியார் மற்றும் தமிழ் நடிகர் விக்கிரம், இயக்குனர் மணிரத்னம் உட்பட திரைப்பட குழுவினர் சிலரும் சென்றிருந்தனர்.
இந்திய கிரிக்கெட்வீரர்களான ரோஹிட் சர்மா மற்றும் விரட் கோலி குதூகலத்துடன் கிரிக்கெட் ஆடுகளத்தில் மோட்டார் சைக்கிள் சகிதம் உலாவரும் காட்சியே இது... நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் வங்காள அணிகளுக்கிடையேயான கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளினால் இலகு வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தம்புள்ளை ரண்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன. தம்புள்ளை நகரமானது தலைநகரான கொழும்பில் இருந்து வடக்காக 150 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் உள்ள நீர்யானைகளே இவை. வடஇந்தியாவில் இப்போது 43 செல்சியசுக்கும் மேலாக வெப்பம் காணப்படுகின்றது. மழைக்காக ஏங்குகிறதோ இந்த நீர்யானைகள்.

Wednesday, June 16, 2010

உங்கள் கைகளில்

அண்மையில் வெளியான திரைப்படம் 2012. திரைப்படத்தை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி... அதுதான் உலகம் முற்றாக அழிந்துவிடுமே என்று ... அனேகமானார் 2012 திரைப்படம் பார்ப்பதை தவிர்த்தனர். இத்திரைப்படத்தை நோக்கினால் உலகம் அழியும் விதத்தை கிராபிக்ஸ் மூலம் மிகவும் தத்தரூபமாக படமாக்கியுள்ளார் இயக்குனர். 2012 ஆம் ஆண்டுக்கு பின் உலகமே இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார் இயக்குனர். சரி திரைப்படம் ஒரு பக்கம் இருக்கட்டுமே உலகைப் பார்ப்போம் அண்மைக்காலமாக உலகெங்கும் இயற்கை அனர்த்தங்கள் சற்று அதிகரித்து பின் அவற்றின் பின்விளைவுகளும் சற்று கூடவாகவே காணப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் சுனாமி. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24 மறக்கமுடியாதநாள். பல லட்சமான உயிர்கள், உடைமைகள் காவு கொள்ளப்பட்டநாள். சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் ஏற்பட்ட விபரீதம் இது. சுனாமிக்கு பின்பும் அடிக்கடி சுமத்திரா தீவைச் சூழ்ந்துள்ள கடற்பகுதியில் தொடர் நடுக்கங்கள். இவற்க்கெல்லாம் பதில் இன்னும் கிடைக்கவில்லை. புவி ஆய்வியலாளர்களின் கருத்து வழமையானதே அதாவது நில நடுக்கத்தின் போது தரை பிளவடைகின்ற கதைதான். சரி நடைபெற்றதுமுடிந்தது இனி நடைபெறாமல் தவிர்ப்பது எப்படி இதற்கு விடையில்லை. அண்மையில் குவாட்டமாலாவில் ஏற்பட்ட பாரிய குழி செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 100 அடி குழி பல கட்டடங்களை விழுங்கிவிட்டது. பல நூற்றுக்கணக்கான மக்களும் காவு கொள்ளப்பட்டனர். இப்பகுதியில் வீசிய உரமான காற்றுக்கே இவ்வாறான நிலை ஏற்பட்டது என கருத்து. சென்ற கிழமை சீனாவிலும் இவ்வாறான ஒரு குழி. இவையனைத்தும் இயற்கை அழிவு என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. ஆனால் இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்பாக எமது மக்கள் என்ன செய்தார்கள் என சற்று அலச வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். (தொடரும்)

2010 உலகக்கிண்ண காற்பந்து

Tuesday, June 15, 2010

2010 உலகக்கிண்ண காற்பந்து

உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் 2010 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகின்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 204 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இம்முறை முதற் தடவையாக ஆப்பிரிக்க நாடொன்றில் இறுதிச் சுற்று நடைபெறுகின்றது. ஜெர்மனியில் நடைபெற்ற 2006 உலகக்கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இத்தாலி வெற்றி பெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதனால் தென் ஆபிரிக்கா நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது.

சுனாமி

சுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும். பூமி அதிர்ச்சி, மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். ஏற்படும் முறை பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது. 2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான். சுனாமி வரும் முறை 1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும். 2. கடலாழ பூகம்பத்தினால் வரும். 3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும். 4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும். 5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) 6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும். சுனாமி எச்சரிக்கை அமைப்பு: அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும். நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

Monday, June 14, 2010

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற IIFA நிகழ்வுகளில் சில

Sunday, June 13, 2010

கோப்பை வென்றது இந்தியா:ரெய்னா அதிரடி ஆட்டம்

இளம் இந்திய அணி சாதித்துக் காட்டியது. நேற்று நடந்த இரண்டாவது "டுவென்டி-20' போட்டியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா 72 ரன்கள் விளாச, ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. தவிர, முத்தரப்பு தொடரில் சந்தித்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட, "டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று இரண்டாவது மற்றும் கடைசி "டுவென்டி-20' போட்டி நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரெய்னா, "பீல்டிங்' தேர்வு செய்தார். தொடரும் ஏமாற்றம்: ஜிம்பாப்வே அணியின் மசகட்சா (2) மீண்டும் ஏமாற்றினார். பின் வந்த சிபாபா(7) சொதப்பினார். டெய்லர் (27), யூசுப் பதானின் "சூப்பர் கேட்ச்சில்' பெவிலியன் திரும்பினார். கவன்ட்ரி ஆறுதல்:அடுத்து வந்த கவன்ட்ரி, அதிரடியில் அசத்தினார். அஷ்வினின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். இவர் 28 ரன்கள் (13 பந்து) எடுத்திருந்த நிலையில், டிண்டாவின் "யார்க்கரில்' வீழ்ந்தார். கேப்டன் சிகும்பரா, 18 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. தைபு (45), லாம்ப் (7) ஆட்டமிழக்காமல் இருந்தனர். விஜய் அசத்தல்: எட்டிவிடும் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, இம்முறை நமன் ஓஜா, முரளி விஜய் துவக்கம் கொடுத்தனர். மந்தமாக ஆடிய ஓஜா 10 ரன்கள் எடுத்தார். அடுத்து முரளி விஜயுடன் கேப்டன் ரெய்னா இணைந்தார். இந்த ஜோடி ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை, எளிதாக சமாளித்தனர். மபோபு ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து மிரட்டிய முரளி விஜய்(46), அரைசத வாய்ப்பை இழந்து, வெளியேறினார். ரெய்னா அசத்தல்: மபோபு பந்தில் சிக்சர் விளாசிய ரெய்னா, சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் மூன்றாவது அரைசதத்தை பதிவுசெய்தார். யூசுப் பதான் (4) நிலைக்கவில்லை. பின் ரெய்னா, மிரட்டல் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்த ரெய்னா, ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Monday, June 7, 2010

ஜகயோதியாய் ஒளிரும் தங்கங்கம்

இப்படத்தை பார்த்தீர்களா பளீரென்று மின்னும் தங்க நகைகளே! நமது கண்களுக்கு புலப்படும் தங்கள் சும்மா ஜகயோதியாய் ஒளிரும். ஆனால் உண்மையில் தங்கள் எப்படியிருக்கும் எதை எவ்வாறு பெறுகின்றார்கள் என்பதை பார்த்தால் கண்கள் கலங்கும். கிழக்கு ஆபிரிக்க நாடுகளுள் ஒன்றான புர்கினா பாசோ என்பதாகும். இங்குள்ள மக்கள் குடிசைக் கைத்தொழிலாக தங்கம் அகழ்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் படும் கஷ்டங்கள், இன்னல்கள் எல்லாவற்றையும் கீழேயுள்ள படங்கள் சான்று பகிர்கின்றன. இவ்வாறு இம் மக்களால் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கபடும் தங்கங்கள் பின்னர் பெரிய தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

வி(வீ)திகளும் நடைமுறைகளும்

கொழும்பு நகரில் வாகனம் செலுத்துவோரில் அனைவருமே அரசாங்க வாகன அனுமதிப் பத்திரம் பெற்றவர்களே.. ஆனால் அவர்களில் சிலர் முறையாக வீதிகளில் வாகனங்களை செலுத்துவதாக தெரியவில்லை. வீதி முறைகளை மீறியும், Track மாறும் போது Signal காட்டாதும் அவர்கள் எண்ணப்படியே செலவதால்தான் அனேக விபத்துக்கள் நடைபெறுகின்றன. இது இவ்வாறு இருக்க முச்சக்கரவண்டி மற்றும் Mணிtணிணூ ஞிதூஞிடூஞு செலுத்துவோரில் சிலரைப் பார்க்கவா வேண்டும். அவர்களின் வெட்டு வை பார்க்க கண்கள் கோடி... ஏன் பெரிய பஸ்வண்டிக்காரனைப்பார்த்தால் காட்டுக்குள் யானையைவிரட்டுவதற்கு உபயோகிக்கும் கோன் அல்லவா அடிக்கிறான்... அவனுக்கு பொறுமை என்பது அறவே இல்லை. வீதி traffic ஆகும் போது ஒரு வாகனங்களும் நகரமுடியாது என்ற கோட்படே தெரியாதவர்கள் எல்லோரும் எவ்வாறு வீதிகளில் நடமாடுகிறார்களோ .... இது போக வாகனங்களில் உள் அமர்ந்திருந்து பிரயாணம் செய்பவர்கள் கூடத வறு செய்கின்றனர். யன்னல் ஓரத்தில் இருந்து துப்பும் போது அது வீதியால் பயணிப்போர் மீதுதான் படும் என்ற எண்ணமோ, சிந்தனையோ இல்லை... நான்முந்தி, நீமுந்தி என்ற சுலோகத்தை மறந்து எதிலும் விட்டுக்கொடுத்து விபத்தை நிறுத்துவோம். - ரிவோ
சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு இரண்டு வயதில் தியா என்ற பெண்குழந்தை ஒன்று உள்ளது. இரண்டாவதாக இன்று அதிகாலை 4.03 மணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் அம்மாவும் நலமாக இருக்கிறார்கள் என்று சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு போனிலும் நேரிலும் சினிமா உலக நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.